சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டனையை ரத்து செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இரண்டாவது மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,’ மருத்துவர் சுப்பையா கொலை தொடர்பான விவகாரத்தில் குற்றவாளிகளின் தண்டனைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தவறானது ஆகும். அது ஏற்க கூடியதும் இல்லை. ஏனெனில் கொலைக்கான ஆதாரம் உள்ளது. குறிப்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் கைது உடனடியாக செய்தனர்’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முத்து இசக்கி,’ இந்த விவகாரத்தில் அப்போது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் அனைத்தும் தெளிவாக இல்லை. எனவே அதனை எப்படி ஆதாரகமாக ஏற்க முடியும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
