சென்னை: தமிழகத்தில் 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296 கோடியே 62 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட புதிய கட்டுமானங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இயங்கும் 217 அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ரூ.296 கோடியே 62 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1232 வகுப்பறைகள், 9 ஆய்வுக்கூடங்கள், 24 குடிநீர் வசதிகள், 60 கழிவறைகள் மற்றும் 500 மீட்டர் சுற்றுச் சுவர், மற்றும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ராணிப்பேட்டையில் ரூ.5 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மைய நூலகம், அலுவலக கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், கடலூரில் ரூ.98 கோடியே 26 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலக கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நாட்டினார்.
