கேங்டாக்: சிக்கிமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிக்கிமில் கியால்ஷிங் மற்றும் மங்கன் பகுதிகளில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் இன்று காலை 11.34 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 12.17 மணியளவில் ரிக்டர் 3.5 அளவில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் மதியம் 12.39 மணியளவில் ரிக்டர் 3.9 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் 4வது முறையாக சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 1.12 மணியளவில் ரிக்டர் 3.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று இரவு தெலுங்கானாவில் ரிக்டர் 3.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
