சண்டிகர்: அரியானாவில் அரசு துறைகள் டெபாசிட் செய்திருந்த ரூ.590 கோடி வங்கி பணத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் கிளை மேலாளர் உட்பட 4 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலம் சண்டிகரில் உள்ள ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியில் மாநில அரசின் பல்வேறு துறைகளும் கணக்கு வைத்துள்ளன. இந்த கணக்குகளை மூடி, பணத்தை திருப்பி தருமாறு சமீபத்தில் கேட்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அரசு சம்மந்தப்பட்ட கணக்குகளில் ரூ.590 கோடி மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதுதொடர்பாக, மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. அரசு தரப்பிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 முக்கிய குற்றவாளிகளை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர். இது குறித்து பஞ்ச்குலாவில், ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநர் ஜெனரல் ஏ.எஸ்.சாவ்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘கைது செய்யப்பட்ட 4 பேரில் ரிபவ் ரிஷி, அபய் குமார் ஆகிய 2 பேர் வங்கியின் முன்னாள் ஊழியர்கள். ஸ்வாதி சிங்லா, அபிஷேக் சர்மா ஆகிய மற்ற 2 பேர் தனியார் நிறுவன உரிமையாளர்கள். ரிபவ் ரிஷி வங்கியின் செக்டார் 32 கிளையின் மேலாளராக இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜினாமா செய்துள்ளார்.
வங்கியின் ரிலேசன்ஷிப் மேலாளராக அபய் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வேலையை விட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்த மோசடிக்கு மூளையாக இருந்துள்ளனர். ஸ்வாதி, அவரது சகோதரர் அபிஷேக் தலைமையிலான ஸ்வஸ்திக் தேஷ் புராஜெக்ட் நிறுவன கணக்கிற்கு ரூ.300 கோடியை இவர்கள் முறைகேடாக மாற்றி உள்ளனர். ஸ்வாதி அபயின் மனைவி ஆவார்’’ என்றார். அரியானா அரசுக்கு சொந்தமான ரூ.583 கோடி மொத்த பணமும் வங்கி தரப்பில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
