பரமக்குடி, பிப்.9: பரமக்குடி அருகே தேத்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், பறவைகளுக்கு உணவாக மீன் குஞ்சுகள் வனத்துறை சார்பாக விடப்பட்டது. பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் தேத்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு உணவாக மீன் குஞ்சுகளை வளர்க்கும் விதமாக, நேற்று, மீன் குஞ்சுகள் விடப்பட்டன. ஒருங்கிணைந்த வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்ட அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட வனத் துறையால் சரணாலயங்களுக்கு வந்துள்ள பறவைகளுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வனத்துறையால் ஒவ்வொரு பறவைகள் சரணாலயங்களிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.மேலச்செல்வனூர், கீழ்செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சரங்குளம் உள்ளிட்ட 4 பறவைகள் சரணாலயங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் செலவில், ஒவ்வொரு சரணாலயத்திற்கு 2 ஆயிரம் மீன் குஞ்சுகளும், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்திற்கு ரூ.5 ஆயிரம் செலவில், ஆயிரம் மீன் குஞ்சுகளும் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு விடப்பட்டன.