சென்னை: 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச்செயலாளராக ஆர்.ஜெயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச்செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பொருளியல் மற்றும் புள்ளியியல் ஆணையராக உள்ள ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராக இருந்து வரும் கே.கோபால் ஓய்வு பெறுவதையொட்டி அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுகிறார். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குநராகவும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதிஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், பொன்னேரி சார் ஆட்சியர் ரவிகுமார் கரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பும் சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலராக சண்முக சுந்தரமும், ஈரோடு வணிக வரி இணை ஆணையராக பொன்மணி ஆகியோரும் நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
