×

ஏஐ உச்சிமாநாடு பிரகடனத்தில் 86 நாடுகள் கையெழுத்து: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஏஐ சர்வதேச உச்சிமாநாடு நேற்று கண்காட்சியுடன் நிறைவடைந்தது. இது குறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,‘‘ பிரதமர் நரேந்திரமோடியின் மனிதனை மையமாக கொண்ட ஏஐ பார்வையானது உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏஐ வசதிகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகமாக்குவது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை சமூக நலனுடன் சமநிலைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, சமூக நல்லிணக்கத்தையும் கூட மனதில் கொள்ள வேண்டும். பாதுகாப்பும் நம்பிக்கையும் மையமாக உள்ளன. அவை முக்கிய அம்சங்களில் ஒன்றாக கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பான, நம்பகமான மற்றும் வலுவான ஏஐ கட்டமைப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதுமைகள் மற்றும் மனித மூலதனத்தின் மேம்பாடு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

இந்த அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. ஏஐ உச்சி மாநாடு பிரகடனத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி உட்பட சுமார் 86 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. மேலும் இரண்டு சர்வதேச அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளது. ஏஐ உச்சி மாநாடு உள்கட்டமைப்பில் மட்டும் சுமார் 250 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டு உறுதி மொழிகளைப்பெற்றுள்ளது’’ என்று தெரிவித்தார்.

Tags : AI Summit ,Union Minister ,Ashwini Vaishnav ,New Delhi ,AI International Summit ,Delhi ,Union Information Technology Minister ,Narendra Modi ,
× RELATED உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை...