திருப்பூர், பிப். 8: திருப்பூரில், எஸ்.ஆர் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி முழுமையாக முடிக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் எஸ்.ஆர். நகர் பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணி துவங்கியது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இத்தகைய, காரணத்தால் எஸ்.ஆர் நகர் பகுதியில் இருந்து சின்னாண்டிப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் அருகில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. கொசு தொல்லையினால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.