திண்டுக்கல், பிப். 21: திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு டிஎன்எஸ்டிசி சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமை பணி செய்யும் தொழிலாளர்கள் பெயர்களை வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும். 2022 உடன் 10 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அவை தலைவர் சாலமோன், துணை தலைவர் குமரேசன், துணை செயலாளர் சின்னராசா மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
