புதுக்கோட்டை, பிப்.21: புதுக்கோட்டையில் பைக்கில் சென்ற வாலிபரை மறித்து வெட்டிய மர்ம நபர்களை போ லீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் மேலக்கொல்லையை சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாரதிராஜா(26). இவர் புதுக்கோட்டை தோப்புக் கொல்லை முகாம் அருகே உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தற்காலிக பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் பாரதிராஜா பணி முடித்து நேற்று கேப்பரை அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டியுள்ளனர்.
பலத்த காயமடைந்த பாரதிராஜா சுதாரித்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் ஓடி அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார். பாரதிராஜா இருசக்கர வாகனம் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளது. காயமடைந்த பாரதிராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
