குமரி கலெக்டர் அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

நாகர்கோவில், பிப்.21: உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்.21ம்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (21ம்தேதி) உலக தாய்மொழி தினத்தையொட்டி, குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று உலக தாய்மொழி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம். தேன் மதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பம் இடுவோம்.

குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்ம பிரியா, உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம், தாஜ் நிஷா, தாசில்தார் கோலப்பன், தனி தாசில்தார் (தேர்தல்) வினோத், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories: