பெரும்புதூர், பிப்.20: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையையொட்டி இந்தியா நம்பர் ஒன் ஏ.டி.எம் மையம் உள்ளது. இதில், நேற்று அதிகாலை பணம் எடுப்பதுபோல் வந்த மர்ம நபர்கள், மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து, பிளந்தபோது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கரமாக ஒலி எழுப்பி உள்ளது. அச்சமடைந்த கொள்ளையர்கள், இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். எச்சரிக்கை அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றதையடுத்து வங்கி நிர்வாகம், இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் ஏ.டி.எம் மையத்தில் சோதனை செய்ததில், இயந்திரத்தை உடைக்கும்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏடிஎம்மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது தெரியவந்தது.
மேலும், அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர். அதேபோல, ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றிய ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
