நத்தம், பிப். 19: நத்தம் அருகே செந்துறை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் செந்துறை பகுதிகளிலுள்ள கடைகளில் நத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் செந்துறை அருகே திருநூத்துப்பட்டியில் பாலகிருஷ்ணன், மணக்காட்டூரில் ஜெயா, மணிமேகலை ஆகியோரது கடைகளில் சோதனை செய்ததில் அங்கு புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அவர்களது கடைகளில் இருந்து மொத்தம் 3 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 கடைகளை பூட்டி சீல் வைத்ததுடன், ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
