கடையம்,பிப்.18: தெற்கு கடையத்தை சேர்ந்த திருநாமநம்பியார் மகன் தளவாய் (50). இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து பராமரித்து வந்தார். வழக்கம்போல் நேற்று கடையத்திலிருந்து ரவணசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஐயம்பிள்ளை குளத்துக்கரையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் மாடு குளத்திற்குள் சென்றது. அதனை விரட்டுவதற்காக குளத்திற்குள் சென்ற போது அவர் திடீரென மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் கணேசன், வீரர்கள் ராமசாமி, வெள்ள பாண்டி, சுந்தர், அமல்ராஜ் ஆகியோர் சுமார் 2 மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இருள் சூழ்ந்ததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து இன்று மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
