காகிதத்தில் மட்டுமே ரயில்வே திட்டங்கள்.. நீதிமன்றத்தை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் :ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி : ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பதிலளிக்க கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, மகாதேவன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

அதனை பார்த்த நீதிபதிகள், என்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவு இல்லை என்றும் நீதிமன்றத்தை குழப்பும் விதமாக அறிக்கை உள்ளதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்றத்தை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் திட்டங்கள், காகிதத்தில் மட்டுமே உள்ளது, செயலில் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லி, பாட்னா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை, பயணிகள் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே ரயில்வே துறை வளரும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

சாதாரண பெட்டிகளில் பயணிகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முக்கியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இறுதி வாய்ப்பாக ஒருமாதம் அவகாசம் தருவதாகவும் அதற்குள் பயணிகள் பாதுகாப்புக்கு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?, எந்தெந்த திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது என்பதை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முறையான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர்.

Related Stories: