சென்னை: கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செய்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 24ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
