‘உழவர் வாழ்வில் உதயசூரியனின் ஒளி பரவுகிறது’ : வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை : இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளால், உழவர் வாழ்வில் உதயசூரியனின் ஒளி பரவுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், “தேசிய அளவில், தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடம், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கம்பு சாகுபடிப் பரப்பு 113 லட்சம் ஏக்கரிலிருந்து 133 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.”என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கிய நமது திராவிட மாடல் அரசில், தொடர்ந்து ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள்!

மூன்று வேளாண் சட்டங்கள் – நூறு நாள் வேலைத்திட்ட முடக்கம் என நாடு முழுக்க வேளாண் பெருமக்கள் அல்லல்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த இருள் பரவாதவாறு உழவர்களின் தோளோடு தோள் நின்று காத்திருக்கிறோம்.ஐந்தாண்டுகளும் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து நிலம் நனைத்தது போல், திட்டங்களாலும் – சாதனைகளாலும் உழவர்களின் உள்ளங்களை மகிழ்ச்சியால் நிறைத்திருக்கிறோம்! இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளால், உழவர் வாழ்வில் உதயசூரியனின் ஒளி பரவுகிறது!,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: