கேட்டது ரூ.50,900 கோடி, தந்தது ரூ.1,151 கோடிதான்.. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செயற்கையாக நிதி நெருக்கடி : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!!

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது,

*சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2வது கட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பூவிருந்தவல்லி – சென்னை வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். ரூ.100 கோடி மதிப்பில் 120 அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1637 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.8363 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

*ரூ.8363 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 12,937 திருக்கோயில்களில் ரூ.8100 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 4180 கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

*சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை செயல்படுத்த போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு எனும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்று வருகின்றனர்.

*சட்டம் ஒழுங்கை பேணிக்காக அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படுகிறது. நாட்டில் மிக அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் 11 ஆயிரம் ஆண் காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

*மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 மகளிர் காவல் நிலையங்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன எனவும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனை அதிகரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

*உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.
23 ஆண்டுகால அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம். ஆண்டுக்குத் தேவையான மொத்த நிதியும் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டில் 10 புதிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆரணியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கைத்தறி பூங்கா ரூ.24 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

*இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.612 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ரூ.11,708 கோடி செலவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.தூய்மை பணியாளர்களுக்கு 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

*உணவு மானியத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.69,000 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.17,086 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*மீன்வளத் துறையில் ரூ.3,056 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளில் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.1,659 கோடி வழங்கப்பட்டுள்ளது. கால்நடை, மீன்வளம், பால்வளத்துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வீட்டு வசதித் துறைக்கு ரூ.7,547 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளது.

*ஒன்றிய அரசிடம் ரூ.50,900 கோடி கேட்ட நிலையில், வெறும் ரூ.1,151 கோடிதான் பேரிடர் நிவாரண நிதியாக கிடைத்தது. வறட்சி பாதித்த விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.100 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு பேரிடர் மேலாண்மைக்கு ரூ.6,013 கோடிதான் ஒதுக்கி உள்ளது; தமிழ்நாடு அரசு ரூ.15,571 கோடி. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செயற்கையாக நிதிநெருக்கடியை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு முன் எப்போதும் சந்திக்காத சவால்களை அரசு எதிர்கொண்டு வருகிறது.

*மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு மீண்டும் ஒருமுறை நியாயமான முறையில் வழங்காமல் நிதிக்குழு பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகத்திற்கு நிதி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மிகச்சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதி பகிர்வால் தமிழ்நாட்டிற்கு ரூ.3.1 லட்சம் கோடி இழப்பு. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.9600 கோடி இழப்பு.

*தமிழ்நாடு அரசு 6 புதிய வனவிலங்கு சரணாலயங்களை அமைத்துள்ளது. இதுவரை 3 காலநிலை உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

*உள்துறை, மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறைக்கு ரூ.15,190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 14,318 பேர் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 82 நீதிமன்றங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன; நீதி நிர்வாகத்துக்கு 2,218 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: