சென்னை: சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் நேற்று தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவுப்படி போதை பொருள் ஒழிப்பு குழு மூலம் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜிஜே மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் சக்திவேல், தடய அறிவியல் துறையின் பகுப்பாய்வு அதிகாரி ரமேஷ் மற்றும் செங்கல்பட்டு மருந்துகள் ஆய்வாளர் பிரிட்டோ முன்னிலையில் நேற்று தீ வைத்து அழிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு 26.9.2025 முதல் 1.11.2025 ஆகிய நாட்களில் சென்னையில் போதை பொருள் கடத்தியதாக மொத்தம் 308 வழக்குகள் கைப்பற்றப்பட்ட 1,613 கிலோ கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
