குஜிலியம்பாறையில் அரசு பேருந்தில் திடீர் புகை

குஜிலியம்பாறை, பிப்.13: குஜிலியம்பாறையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற அரசு டவுன் பேருந்தில் திடீர் புகை ஏற்பட்டதால், பேருந்தை நிறுத்தி மாணவ, மாணவிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். ஆர்.வெள்ளோட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு கிளம்பும் அரசு டவுன் பஸ் சிசிசிகுவாரி, சேர்வைகாரன்பட்டி, பாளையம் வழியே குஜிலியம்பாறைக்கு மாலை 6 மணிக்கு வருவது வழக்கம். பின்னர் குஜிலியம்பாறையில் இருந்து 6.15 மணிக்கு கிளம்பி மல்லப்புரம், பல்லாநத்தம் சாலை வழியே ஈசநத்தம் வரை செல்வது வழக்கம்.

இந்த டவுன் பஸ்சில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி நாட்களில் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அதே போல் நேற்று மாலை 6.15 மணிக்கு குஜிலியம்பாறையில் இருந்து கிளம்பிய அரசு டவுன் பஸ்சில், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் உல்லியக்கோட்டை, மல்லப்புரம், பல்லாநத்தம், ஈசநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில் குஜிலியம்பாறை ரயில்வே சுரங்கப்பாதையில் அரசு டவுன் பஸ் கடந்து சென்ற போது, பஸ்சின் பேனட்டில் இருந்து வயர் கருகிய வாடை அடித்து புகை ஏற்பட்டுள்ளது. இதனால் பதட்டமடைந்த அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்தி, பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகளை பத்திரமாக கீழே இறக்கி விட்டனர். இச்சம்பவம் அறிந்து மாணவ, மாணவிகளை அவரவர் பெற்றோர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.

குஜிலியம்பாறை-ஈசநத்தம் வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் பழுதான நிலையில் இயக்கப்படுகிறது. இதனால் எப்போது அசம்பாவித சம்பவம் நடக்குமோ என்ற அச்சத்துடன் டவுன் பஸ்சில் பள்ளி மாணவர்கள், பயணிகள் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இவ்வழித்தடத்தில் புதிய டவுன் பஸ் வசதி செய்து தர மாவட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: