×

என்எல்சி ஒப்பந்த பணிகளில் ரூ.442 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார் கொடுத்தவரிடம் ஆவணங்களை பெற்று சிபிஐ விசாரணை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார். சிபிஐ நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், சாம்பல் விற்பனை, ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, காலாவதியான டெண்டர்களின் காலத்தை நீட்டித்தது.

73,000 டன் அளவுக்கு செம்மண்ணை சட்டவிரோதமாக அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் என்.எல்.சி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தனது புகார் தொடர்பான முழு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாமல், நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. என்.எல்.சி. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாருக்கான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல, சிபிஐ விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சட்டப்படி சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : CBI ,NLC ,Chennai ,Cuddalore ,Manikandan ,Neyveli Lignite Company ,Madras High Court… ,
× RELATED தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு...