திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதிமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தமிழகம் பாதுகாப்பில் முதன்மை மாநிலமாக இருந்து வந்தது. அடுத்து அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார். பிரதமர் சொன்னது போல், நாங்களும் இப்பொழுது சொல்கிறோம். டபுள் இன்ஜின் ஆட்சி இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சியை அடையும். தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் தேவை என்றால் ஒன்றிய, மாநில அரசுகள் டபுள் இன்ஜினாக செயல்படவேண்டும்.
இப்படித்தான் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதன்படி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் டபுள் இன்ஜின் ஆட்சி இருந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடைய முடியும். பிஜேபி வந்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. விஜய் வந்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அவருக்கு சென்று விடும். நாங்கள் என்ன செய்தாலும் செய்திகள் சிறிதாகவே வருகிறது. எனவே வீடுவீடாக சென்று நமது பணிகளை எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு தங்கமணி பேசினார்.
