நம்பி ஏமாந்து விட்டேனே… எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார்: அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நேரடி அடாக்

 

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் 50வது திண்ணை பிரசார விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு தலைமை வகித்து பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது உளுந்தூர்பேட்டை தொகுதியில் சாலை வசதி, அரசு பள்ளி கட்டிடங்கள், அரசு அலுவலக புதிய கட்டிடங்கள், காவல் நிலையங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தினேன். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமே கொண்டுவர முடியவில்லை. அன்று எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த அரசு கலைக்கல்லூரி ரிஷிவந்தியம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நான் கேட்டபோது, ரிஷிவந்தியம் தொகுதி அதிக கிராமப்புறங்களை கொண்ட பகுதி. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அங்கு கல்லூரி அமைப்பதாக கூறினார்.

உளுந்தூர்பேட்டை ரோட்டிற்கு அருகில் உள்ளதால் அடுத்தாண்டு கண்டிப்பாக கலைக்கல்லூரி தருவேன் என அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறியதை நம்பி ஏமாந்து விட்டேன். கிராமப்புறத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதிக்கு கல்லூரி தந்ததை சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தோடு பார் என கூறினார். அதனால் நான் அமைதியாக இருந்து விட்டேன். இவ்வாறு பேசினார். எடப்பாடி பழனிசாமி குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட பேரவை செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: