தென்காசி, பிப்.11: இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் குடற்புழு நீக்க மாத்திரையினை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும், தனியார் பள்ளிகளிலும் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில்அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
மேலும், பள்ளிக்கு செல்லாத சிறார்க்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பேருசார் மகளிருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வைத்து வழங்கப்படுகிறது’ என்றார். முன்னதாக தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் வாசிக்க மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், மாவட்ட நல கல்வியாளர் ஆறுமுகம், இலஞ்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நசிம்அகமது, தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர் மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
