திருச்சி மத்திய மண்டலத்திற்கான த.வெ.கவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் திருச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அறிக்கை குழு தலைவர் அருண்ராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்துள்ளார். ஊழல் என்றால் என்ன என்பது அவருக்கு தெரிய வேண்டும்.
அவர் யோசித்து பேச வேண்டும். ஊழல் தடுப்பு சட்டம் என்றால் அவருக்கு தெரியுமா, எந்த அரசு பதவியிலும் இல்லாத விஜய் செய்தது ஊழல் கிடையாது. எதை வைத்து விஜய் ஊழல் செய்தார் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. வரி ஏய்ப்பு என பொத்தாம் பொதுவாக கூற கூடாது.
காலம் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணியை நம்பி தவெக தொடங்கப்படவில்லை. இருந்தாலும் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜய் அறிவிப்பார். அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிக்காட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
