மயிலாடுதுறை, பிப். 3: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், சத்துணவு மாவட்ட செயலாளர் கமலநாதன், மின்வாரிய ஓய்வூதிய சங்கம் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினர். மாவட்ட தலைவர் பழனிவேல் பேசுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். அனைத்துவகை ஓய்வூதியர்களுக்கும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.