மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று முக்கிய பேச்சுவார்த்தை: பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

கோலாலம்பூர்: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று மலேசியா புறப்பட்டுச்சென்றார்.  கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வரவேற்றார். மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன், துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லுகானிஸ்மான் பின் அவாங் சவுனி ஆகியோர் பிரதமர் அன்வருடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றனர். மேலும் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய சமூகத்தை சேர்ந்தவர்களை சந்தித்தார். மலேசிய பிரதமர் இம்ராஹிமும் பிரதமர் மோடியும் ஒரே காரில் பயணம் செய்தார். கோலாலம்பூரில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் அன்வர் இப்ராஹிமும் கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி,‘‘கோலாலம்பூரில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தோரின் அன்பான வரவேற்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நமது புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே ஒரு வலுவான பாலமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

2026ம் ஆண்டில் முதல் வெளிநாட்டு பயணமாக மலேசியா வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய மலேசிய பிரதமர் அன்வர்,‘‘நான் பிரதமராவதற்கு முன்பே இருவரும் நண்பர்களாக இருந்தோம். இங்குள்ள தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றனர்” என்றார். மலேசியா சென்ற பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பதிவில், ‘‘விமான நிலையத்தில் எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த அன்பான வரவேற்பால் நான் நெகிழ்ந்து போனேன்.

எங்கள் உரையாடல்களையும் இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக இரு தலைவர்களும் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன் மூலம் இருநாட்டுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில்,‘‘இரு நாடுகளும் இடையே ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வலுவான பொருளதார ஈடுபாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான வரலாற்று உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் சீரான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

பிரதமர் அன்வர் இம்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளையும் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். எங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் புத்தாக்க கூட்டாண்மையை மேம்படுத்தவும், எங்கள் ஒத்துழைப்பை புதிய களங்களுக்கு விரிவுபடுத்தவும் நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்” என்று பதிவிட்டு இருந்தார்.

* உலகத்துடன் இந்தியாவை இணைக்கும் தமிழ்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மலாய் மொழிக்கும் இந்திய மொழிக்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் உள்ள 2வது நாடு மலேசியா. இந்தியர்களுக்கும், மலேசியர்களுக்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது. உலகத்துடன் இந்தியாவை இணைப்பது தமிழ்தான். தமிழ் இலக்கியம் முடிவில்லாதது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது’’ என்றார்.

Related Stories: