கரூர், பிப்.3: கரூர் நகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டியில் ரூ.472.85 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட துணை மின்நிலைய திறப்பு விழா நடைபெற்றது. கரூர் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 7 கி.மீ அப்பால் புலியூர் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், தொழிற்பேட்டை சுற்றிலும் உள்ள பகுதிகளான தொழிற்பேட்டை, செல்வம் நகர், டீச்சர் காலனி, சணப்பிரட்டி, வடக்குப்பாளையம், மேலப்பாளையம், நரிகட்டியூர் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதால் தொழிற்சாலை உபகரணங்களும், விவசாய மோட்டார்களும் மற்றும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள மோட்டார்களும் பழுதடைவதால் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.