ஆறுகாணி அருகே சோகம் பாறை வெப்பத்தில் உடல் வெந்து முதியவர் பலி

நாகர்கோவில், பிப்.3: ஆறுகாணி அருகே வெயில் சுட்டெரிக்கும் வேளையில் பாறையில் சுயநினைவின்றி கிடந்தவர், வெப்பத்தில்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே உள்ள மருதம்பாறை ரோடு அருகத்துவீடு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் (83). இவர் சுய நினைவின்றி இருந்தார். திடீர், திடீரென வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். கடந்த 31ம் தேதி, காலை  வீட்டில் இருந்து திடீரென லெட்சுமணன் மாயம் ஆனார். அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அன்று மாலை , வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஊத்துக்குழி அருகில் உள்ள பாறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் சென்று அவரை தூக்கிய போது, வெயிலால் பாறையில் ஏற்பட்ட சூட்டில் அவரது இடதுபுறல் கால் முதல் தோள் பட்டை வரையிலும் வெந்து, தோல் உரிந்த நிலையில் இருந்தது. அவரை மீட்டு குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த லெட்சுமணன் நேற்று (2ம்தேதி) காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் ராஜாமணி, ஆறுகாணி காவல் நிலையத்தில்  தகவல் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுய நினைவின்றி பாறையில் கிடந்த முதியவர், உடல் வெந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: