கொடைக்கானலில் நூறாண்டு பழமையான அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு விழா கொடியேற்றம்: பிப்.14ல் அலங்கார தேர்பவனி

 

கொடைக்கானல்: கொடைக்கானல் புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தில் 105வது ஆண்டு திருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 14ம் தேதி இரவு அலங்காரத் தேர்பவனி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. 1921ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்படி, 105ஆவது ஆண்டுத் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக, மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து புனித அந்தோணியார் திருஉருவ திருக்கொடி ஊர்வலம் புறப்பட்டது. காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக அந்தோணியார் ஆலயத்தை ஊர்வலம் வந்தடைந்தது.

இதையடுத்து, கொடைக்கானல் வட்டார அதிபர் அருட்தந்தை ஜெயசீலன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நடைபெற்றது. மதுரை ரயில்வே காலனி பங்குத்தந்தை தேவதாஸ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் சிறப்பு வழிபாட்டை வழி நடத்தினர். பின்னர், அந்தோணியார் திருஉருவ திருக்கொடி அர்ச்சிக்கப்பட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் முகமது இப்ராகிம், ஸ்ரீதர் மற்றும் கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆண்டு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.14ம் தேதி இரவு மின்விளக்கு அலங்கார தேர்பவனியும், 15ம் தேதி பகல் தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: