வேலூர், பிப்.2: கே.வி.குப்பம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து சொத்தை அபரிக்க முயலும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் பெண் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில், இறையன்காடு அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்ைத சேர்ந்த சாந்தி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கிராமத்தை சேர்ந்த தேவராஜி, தாயார் ஆண்டாள். எனது தாய் ஆண்டாள் கடந்த 2020 நவம்பரில் இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு பின்னர் இறப்பு வாரிசு அடிப்படையில் எனக்கு வந்த பூர்வீக சொத்தை எனது மகள் பெயரில் நான் செட்டில்மெண்ட் செய்து கொடுத்தேன். இந்நிலையில் எனது அண்ணன் ஆனந்தனின் மகன் அனிஷ்குமார், டிகே.புரம் விஏஓவாக உள்ளார். அவர், நான் விஏஓவாக உள்ளேன், பூர்வீக சொத்தை உங்களுக்கு தரமுடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். சொத்து பத்திரங்கள், வாரிசு சான்றிதழ்கள் என்னிடம்தான் உள்ளது. நாங்கள் பொதுப்பிரிவு வகுப்பை சேர்ந்தவர்கள், ஆனால் அனிஷ்குமார் தன்னை பிற்படுத்தப்பட்டோர் எனக்கூறி போலி சான்றிதழை பொய்யாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளார். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.