சாயல்குடி, ஜன.30: கடலாடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். ஆணையாளர் அன்புக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவணுபூவன் வரவேற்றார். கூட்டத்தில் கடுகுசந்தை கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ‘‘கடலாடியிலிருந்து மீனங்குடி, சாத்தங்குடி வழித்தடத்தில் மேலச்செல்வனூர் வழியாக ராமநாதபுரத்திற்கு நேரடியாக பஸ் இயக்க வேண்டும் என்றார். சிக்கல் கவுன்சிலர் அம்மாவாசி பேசுகையில், ‘‘சிக்கல் மேற்கு காலனி, பள்ளிவாசல் தெரு, தொட்டியாப்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து கிடக்கிறது. பள்ளி மாணவர்கள், தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்கும் பெண்கள் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும்’’ என்றார்.