ஓடும் காரில் திடீர் தீ விபத்து பொறியாளர் உயிர் தப்பினார்

திருச்செங்கோடு, ஜன.30: ஈரோடு  மாவட்டம், திண்டல் பகுதியை சேர்ந்த கட்டிட இன்ஜினியர் பிரேம்குமார் (22). இவர் தொழில் விஷயமாக ராசிபுரத்திற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு ஈரோடு நோக்கி தனது காரில் சென்றுள்ளார். இரவு 11 மணியளவில், எலச்சிபாளையம் அடுத்த சித்தமூப்பம்பாளையம்  பிரிவு அருகே சென்றபோது, எதிரே டூவீலரில் வந்த ஒருவர் காரை நிறுத்தும்படி கூச்சலிட்டார். பிரேம்குமார் உடனடியாக காரை  நிறுத்தி பார்த்தபோது, காரின் அடியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து பிரேம்குமார் காரில் இருந்த தனது உடமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. தீ விபத்து குறித்து எலச்சிபாளையம்  போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: