ஆவடி: தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைக்கு வந்து சென்ற 8 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். ஆவடி, காமராஜர் நகர், 3வது தெரு சேர்ந்தவர் தமிழ்மணி (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வைஷாலி (25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. தற்போது வைஷாலி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சோழம்பேடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பமான 3வது மாதத்தில் இருந்து வைஷாலி தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வைஷாலி, தனது தாய் சரளாவுடன் அந்த மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து, ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதன்பிறகு, வைஷாலியை அழைத்து கொண்டு மருத்துவமனை ஊழியர்கள் ஸ்கேன் அறைக்கு சென்றனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்.