திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மாலா. இவரது மகள் சுமதி (28). இவருக்கும் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியர் சீனிவாசன் (எ) ஏழுமலை என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது சுமதிக்கு, 10 சவரன் நகைகள், பைக் ஆகியவை பெற்றோர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணம் ஆனது முதல், ஏழுமலையும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு சுமதியை அடிக்கடி அவரது தாய் வீட்டுக்கு அனுப்பினர். சமீபத்தில், சொந்தமாக வெல்டிங் கடை வைக்க வேண்டும் என கூறி, அதற்கான பணத்தை வாங்கி வரும்படி சுமதியை, அவரது தாய் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தாய் வீட்டுக்கு சென்ற சுமதி கடந்த 2 நாட்களாக மன வருத்தத்துடன் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதுபற்றி கேட்டபோது, தாய் மாலாவிடம் மட்டும், மாமியார் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு கொடுமை படுத்தியதும், கூடுதல் நகைகளை வரதட்சணையாக கேட்டும் தொல்லை செய்கிறார்கள் என்றும் கூறி அழுதுள்ளார்.