பாப்பாக்குடி, ஜன. 29: திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேத அலங்கார தீபாராதனை இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 9ம் திருநாளையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் நேற்று மதியம் தீர்த்தவாரி நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.இதைத்தொடர்ந்து பல்வேறு கோயில்களுக்கு தாமிரபரணியில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்துச் சென்றனர். தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகளை மேடைதளவாய் உச்சிகால பூஜை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.இதேபோல் அம்பையில் உள்ள பழமைவாய்ந்த காசிபநாதசுவாமி கோயிலில் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் 51வது ஆண்டு தைப்பூசத் திருவிழா சுவாமி தீர்த்தவாரியுடன் நடைபெற்றது. மேலப்பாளையம் தெரு சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து மெயின்ரோடு வழியாக கொண்டு வரப்பட்டு காசிபநாதசுவாமி கோயிலை வந்தடைந்தது.