திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை : திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது!

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்,திருவள்ளுவர் விருது பேராசிரியர் சத்தியவேல் முருகனாருக்கும், ஈ.வெ.ரா., விருது வழக்குரைஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வனுக்கும், அண்ணாதுரை விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், காமராஜர் விருது – எழுத்தாளர் இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், திரு.வி.க., விருது – முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் செல்லப்பாவுக்கும், கலைஞர் விருது எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட விடுதலை விரும்பி ஆகியோருக்கும் வழங்கி கௌரவித்தார்.

இதேபோல், இலக்கிய மாமணி விருதுகளில், மரபு தமிழ் விருது – எழுத்தாளர் ராமலிங்கத்துக்கும், ஆய்வு தமிழ் விருது எழுத்தாளர் மகேந்திரனுக்கும், படைப்புத் தமிழ் விருது எழுத்தாளர் நரேந்திரகுமாருக்கும் வழங்கப்பட்டது. விருது தொகையாக ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விருதாளர்களுக்கு தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதி

திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை (ஜனவரி 16) முன்னிட்டு தமது சமூக வலைதளப் பக்கங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:

அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு- திருவள்ளுவர்

*சமூக நீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.
* வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்
*இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்
*தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்! அறம் – பொருள் – இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: