‘ரத்த நிலா’ என அழைக்கப்படும் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது : வெறும் கண்களால் பார்க்கலாம்

சென்னை : ‘ரத்த நிலா’ என அழைக்கப்படும் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வின்போது சூரிய ஒளி சந்திரனின் மீது படுவதால் அது சிவப்பு நிறத்தில் காணப்படும்.பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கிய இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் 6.48 மணிக்கு நிறைவடையும். பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி படிப்படியாக மறையும் சந்திரன், மாலை 4.34 மணிக்கு முழுமையாக மறையும். மாலை 4.34 மணி முதல் 5.33 மணி வரை சந்திரன் முழுமையாக பூமியின் நிழலால் மூடப்பட்டு இருண்டு காணப்படும். மாலை 5.33 மணிக்குப் பிறகு படிப்படியாக சந்திர கிரகணம் விலகி 6.48 மணிக்கு கிரகணம் நிறைவடையும்.

இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் 3.28 மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் பகலாக இருப்பதால், 6 மணிக்கு பின் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் முடிவடைவதை பார்க்கலாம். அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் சந்திர கிரகணத்தின் காட்சி முழுமையாக தெரியும். சென்னையில் இந்த முழு சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியை சுமார் 31 நிமிடங்கள் வரை காண முடியும். இன்று மாலை 6:17 மணி முதல் மாலை 6:48 மணிவரை இந்த அற்புத காட்சியை கண்டு ரசிக்கலாம். கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளிலும் இதே அளவு நேரம் வரை கிரகணத்தின் இறுதிப் பகுதியைக் காண வாய்ப்புள்ளது. சூரிய கிரகணத்தை போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பாதுகாப்பாக பார்க்கலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுதி செய்துள்ளது.

Related Stories: