புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,199 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியை கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,270 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி பார்வையிட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 358 முன்கள பணியாளர்கள், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 224 முன்கள பணியாளர்கள், திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 240 முன்கள பணியாளர்கள் என மாவட்டத்தில் 4 இடங்களில் 2,092 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் இரண்டு தனித்தனி இடங்களில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.