அரியலூர்,ஜன.27: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மர கருப்பையா. இவர் இயற்கை ஆர்வலர். தனது வாழ்நாளில் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்தவர். இவரது மகன் செங்கமலம் என்பவரும் விவசாயி. இந்நிலையில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு விவசாயம், நாடு இந்தியா என்பதை நினைவுபடுத்தும் விதமாகவும், தேச ஒற்றுமை ஓங்கவும் நேற்று கள்ளூர் கிராமத்தில் இருந்து மண் மற்றும் நெல் மணிகள் கலந்த ஒரு குடத்தில் சேகரித்து, அதில் குச்சி வைத்து தேசிய கொடியை பறக்கவிட்டு சுமார் 25 கிலோ எடையுடை இந்த குடத்தை தலையில் வைத்து தனது டூவீலரில் கள்ளூரில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஓட்டி வந்தார்.
பின்னர் அங்கிருந்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு குடத்தை சுமந்த படி வாகனத்தை ஓட்டி வந்தார். இதனை வழி நெடுவிழும் பார்த்த பொது மக்கள் ஆச்சரியமாகவும், விவசாயின் தேச பக்தியையும் கண்டு வியந்தனர். பலர் செல்போன்களில் புகை படம் மற்றும் விடியோ எடுத்தனர். விழா நடைபெறும் இடத்திற்கு வந்த விவசாயி செங்கமலத்தின் தேச பக்தியை போற்றும் விதமாக மாவட்ட கலெக்டர் ரத்னா அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.