காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள் நியமிக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை என தமிழ்நாடு டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை பாரட்டுவதாகவும் அதேவேளையில் ஆர்டர்லிகளாக சீரூடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தி தாள்களிலும், பொதுத்தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில் ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகளாக பணியில் இருப்பது தொடர்பாக புகார் எதுவும் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயளாலர் மற்றும் உள்துறை செயலாளரை தாமாக முன்வந்து இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மாவட்ட அளவில் ஆர்டர்லிகளை பணியமர்த்த கூடாது என்று உள்துறை செயலாளர் டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறி அது தொடர்பான அறிவுறுத்தல் உத்தரவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் சிறை துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சிறை துறை டிஜிபி இந்த பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். அதேபோல் காவல்துறையிலும் ஆர்டர்லி முறை முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எனவே, மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, எஸ்பி அந்தஸ்தில் உள்ள 2 அதிகாரிகள், மாநகரமாக இருந்தால் உதவி கமிஷனர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும். காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லியை பயன்படுத்தினால் அது குறித்த தகவல்களை எஸ்.பி குழுவுக்கு தகவல் தர வேண்டும். அந்த தகவலை ஆய்வு செய்து கலெக்டர் உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை குறித்த உள்துறை செயலாளர் அரசுக்கு அறிக்கை தர வேண்டும். இந்த குழுவை 2 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: