ஊட்டி: ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பூத்துக் குலுங்கும் சீனாவின் அரசி எனப்படும் (‘குயின் ஆப் சைனா’) பவுலோனியா பார்சினி மலர்கள் தற்போது பூக்கத்துவங்கியுள்ளது. சீனாவின் அரசி என பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள் மரங்களில் வளரக்கூடியவை. இவை சீன நாட்டில் அதிகளவு உள்ளன. இந்த மரங்கள் அங்கு பல்வேறு சாதனங்கள் செய்வதற்காகவும், மர இழைகள் தயாரிப்பதற்காகவும் வளர்க்கப்படுகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை) இந்த மரம் முழுவதும் உள்ள கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த மலர்களை சீன மக்கள் ‘குயின் ஆப் சைனா’ என்று அழைக்கின்றனர். இவ்வகை மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மரம் மட்டுமே உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து இம்மரம் கொண்டு வரப்பட்டு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். கடந்த மாதம் வரை மழை பெய்த நிலையில், பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது.
இதனால், பனி காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் மலர்கள் பூக்காமல் இருந்தது. மரம் முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டது. தற்போது மழை குறைந்த கடந்த 10 நாட்களுக்கு மேலாக பனி கொட்டி வருகிறது. இதனால், இம்மரத்தில் ஒரு சில கிளைகளில் மட்டும் பூக்கள் பூக்கத்துவங்கியுள்ளன. தாமதமாக மலர்கள் தூக்கத் தொடங்கினாலும், அரிதாக காணக் கிடைக்கும் இந்த மலர்களை தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
