தேனி, டிச. 25: தேனி நகர் பொம்மையகவுண்டன்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார் . தேனி நகர் பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் அழகர்சாமி(60). நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற அழகர்சாமி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக அஜாக்கிரதையாக வந்த கார் அழகர்சாமி மீது மோதியது. இதில் அழகர்சாமி படுகாயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அழகர்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அழகர்சாமி உயிரிழந்தார்.
இது குறித்து அழகர்சாமி மகன் கோவிந்தராஜ் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய பெரியகுளம் நகர், பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் முருகேசன் மகன் சரவணக்குமார் (34) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
