கடந்த காலத்தின் காரணங்களை அறிவதே அறிவுடைமை: கமல்ஹாசன் கருத்து

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன், பெரியார் மற்றும் எம்.ஜி.ஆருடன் சேர்த்து ஆய்வாளர் தொ.பரமசிவனுக்கும் நேற்று தனது சமூக வலைத்தளம் மூலம் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டிருந்த பதிவில், ‘என் வாழ்க்கையின் 3 முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று (நேற்று). பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு ஆகிறது.

அவர் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு, சமூக தீமைகளை சுட்டெரித்துக்கொண்டே இருக்கிறது. தந்தை பெரியார் காட்டிய வழியில், ஒளியில் தமிழ் சமூகம் எந்த ஒடுக்குமுறைக்கும் அஞ்சாமல் வாழ்வாங்கு வாழும். இரண்டாமவர், என்றென்றும் என் இதயத்தில் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர். கலைவாழ்விலும், பொதுவாழ்விலும் எனக்கு உத்வேகம் கொடுத்தவர்.

தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் இன்னும் தொடர்பவர். மற்றொருவர், தமிழ் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளி பாய்ச்சிய ஆய்வாளர் தொ.பரமசிவன். கடந்த காலத்தை கதையாக படித்தால் போதாது. அவற்றின் மெய்யான காரண காரியங்களை அறிவதே அறிவுடைமை என்று கற்பித்த ஆசான். 3 ஆசிரியர்களையும் மனம் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: