நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

 

சென்னை: நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ,விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணு அவர்களின் 101 வது பிறந்த நாள் வரும் 26 ம் தேதி வருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரா. நல்லகண்ணு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

எனினும் மருத்துவர்கள் ஆலோசனை அடிப்படையில், வீட்டிலும் மருத்துவக் கண்காணிப்பில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், நல்லகண்ணு அவர்களை அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அருகில் சென்று, அவரோடு உரையாட அனுமதிப்பதில்லை என்பதால், அவரது 101வது பிறந்த நாளை முன்னிட்டு, தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அவரை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இது தான் அவர் குணமடைய உதவும் வாழ்த்தாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

Related Stories: