ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்

*நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும்,சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளவாரி கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள நிலையில் அதில் இருக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் அவதியடைந்து வருகிறது.

இந்நிலையில் கால்வாய் செல்லும் பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு பிரதான 2 சாலைகள் குறுக்கே கடந்து செல்கின்றது. சாலை செல்லும் சிறிய பாலம் 50 ஆண்டுகள் தாண்டியது என்று கூறப்படுகிறது. பக்கவாட்டு சுவர்கள் பலம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை வெகு நாட்களாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தற்போது பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பழைய கால கட்டமைப்பு என்பதற்கு உதாரணமாக தற்போது சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: