புதுடெல்லி: 2025-26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு ரூ.127.58 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இந்தத் தொகை, 2025-26-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக் குழுவின் கீழ் வழங்கப்படும், மானியங்களின் 2வது தவணையாகும்.
பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் 9 மாவட்ட பஞ்சாயத்துகள், 74 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 2,901 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த மானியங்கள் தரப்பட்டுள்ளன. இந்த நிதியை, சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
