சென்னை: தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இரவில் கடும் குளிர் இருப்பதுடன் காலையில் பனி மூட்டம் காணப்படும். தமிழகத்தில் பெரும்பாலும் நேற்று வறண்ட வானிலை நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அனேக இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.
அதன்படி சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்து காணப்பட்டது. தஞ்சாவூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், சேலம், திருச்சி, திருவள்ளூர், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
அதன் காரணமாக கடலோர தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடக்கு திசையில் இருந்தும் கிழக்கு திசையில் இருந்தும் வீசும் குளிர் காற்றின் காரணமாக தமிழகத்தில் இரவில் கடும் குளிர் நிலவும். காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
