சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகவும், சுடர்விடும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறது. மகளிர்க்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வாழ்வில் பொருளாதார ஏற்றம் காண விடியல் பயணத்திட்டம், பெண் கல்வியை உயர்த்திடும் புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதிகள், அறநிலையத்துறையில் பெண் ஓதுவார்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு கலை வித்தகர் விருது, அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்வு, தொழில் முனைவோராக பெண்கள், காவல்துறை மகளிர்க்கு சலுகைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு, சிப்காட் தொழில் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள் போன்ற எண்ணற்ற மகளிர் திட்டங்களால் தமிழ்நாடு ஒளிருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற பின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்கு புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்.
அதன்படி,
* சமூகத்தில் பெண்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை’ 2024ஐ முதல்வர் 21.2.2024 அன்று வெளியிட்டு மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளார்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கும் விடியல் பயணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒரு நாளைக்கு ஏறத்தாழ 60 லட்சம் மகளிர் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் மகளிர் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ 1000 ரூபாய் வரை வாய்ப்பை பெற்று மகிழ்கின்றனர்.
* ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாக திகழும் மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதுவரை 1 கோடியே 14 லட்சம் மகளிர் மாதம்தோறும் 1000 ரூபாயை வங்கி கணக்குகளில் நேரடியாக பெற்று தன்னம்பிக்கை உணர்வில் திளைக்கிறார்கள்.
* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை அரசு பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ்வழியிலும் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கல்லூரி வாசலையே தொட்டு பார்க்காத குடும்பங்களில் இருந்து பெண்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அருமையான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.
* மகளிர் படித்து முடித்து சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இதை களையும் நோக்கில் பணிபுரியும் மகளிர்க்காக சேலம், தஞ்சாவூர் உள்பட முக்கிய நகரங்களில் எல்லாம் உருவாக்கியுள்ள அருமையான திட்டம் தோழி விடுதிகள் திட்டம். இதன்மூலம் பணிபுரியும் மகளிர் பாதுகாப்புடன் பணிபுரிகின்றனர்.
* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழு கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களை சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிடும் கடன் உச்ச வரம்பை ரூ.12 லட்சம் என்பதில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டார். 2016 முதல் 2020 வரை 4 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.39,468.88 கோடி. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 2021 முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள கடன் ரூ.1,12,299 கோடி.
* சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* பெண்கள் கல்வியோடு நின்றிடாமல் அவர்களுக்கு தாமே சுயமாக தொழில் தொடங்கும் வாய்ப்பையும் முதல்வர் உருவாக்கி தந்திருக்கிறார். ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசாங்கம் மானிய நிதி அளிக்கும் டான்சீட் (தமிழ்நாடு ஸ்டார்ட் அப் சீட் கிராண்ட் பண்ட்) என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, பெண் தொழில் முனைவோர் தொடங்கும் புத்தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய அளவில் தொழிற்சாலையில் பணிபுரியும் மகளிரில் 41 சதவீதம் மகளிர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்து பாராட்டியுள்ளது.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் காவலர்கள், முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது வீதிகளில் நீண்டநேரம் நிற்க வைப்பதை தடுத்து, அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்கப்படுகிறது.
* கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 2024ம் ஆண்டில் மட்டும் மகளிர்க்கான கலைத்துறை வித்தகர் சிறப்பு விருது பழம்பெரும் திரையுலக பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த மகளிர் பத்திரிகையாளர்க்கும் சிறப்பு விருதாக கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டு சுகிர்தா சாரங்கராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
* திருக்கோயில்களில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 11 பெண்கள் திருக்கோயில்களில் பெண் ஓதுவார்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
* உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு 1996ல் வழங்கப்பட்டது. பின்னர் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு, லட்சக்கணக்கான மகளிர் உள்ளாட்சி நிறுவனங்களில் பதவிப் பொறுப்புகள் பெற்று தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கு பாடுபடுகின்றனர். இன்று 21 மாநகராட்சிகளின் மேயர்களில் 11 மகளிர் பெண் மேயர்களாக விளங்குவது தமிழ்நாட்டிற்குரிய தனிச் சிறப்பாகும்.
* தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பகங்களில் விட்டுவிட்டு கவலையின்றி தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக 17 சிப்காட் நிறுவனங்களில் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்தினார். இந்த காப்பகங்களில் ஏறத்தாழ 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றார்கள்.
இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசில் புதிய புதிய திட்டங்கள் நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது என்பதை வரலாறு போற்றுகிறது.
இப்படி பெண்கள் முன்னேற்த்திற்காக தொடர்ந்து பல திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த துறைகள் தோறும் சாதனைகள் படைத்து வெல்லும் தமிழ்ப் பெண்களை சிறப்பிக்கும் மாபெரும் விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவர்களும் பயன்பெற்று மாதம் 1000 ரூபாய் பெற கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை விரிவுபடுத்தி வழங்கியுள்ளார்.
* அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மகளிர் ஆசிரியைகளின் மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.
