பணகுடி, ஜன. 17: வள்ளியூர் ஒன்றியம், சவுந்தரலிங்கபுரத்தில் செயல்படும் ஒன்றிய துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுப் பேசிய இன்பதுரை எம்எல்ஏ வலியுறுத்தினார். அப்போது பதிலளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதன்படி இப்பள்ளி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள 10 துவக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. இதை வரவேற்ற இன்பதுரை எம்எல்ஏ மற்றும் கிராம மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் இதுதொடர்பாக இன்பதுரை எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில், எனது கோரிக்கையை ஏற்று சவுந்தரலிங்கபுரம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு உறுதுணையாக நின்று பரிந்துரைத்த அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு ராதாபுரம் தொகுதி மக்கள், சவுந்தரலிங்கபுரம் கிராம மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.